தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கேபிள் டி.வி. சேவையில் ஏகபோக உரிமையைத் தடுத்து, பொதுமக்களுக்கு குறைந்த செலவில், நிறைவான சேவை கிடைக்க தற்போது வழியேற்பட்டிருப்பதாகக் கூறினார். சென்னை நீங்கலாக, தமிழகத்தின் 31 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் உதயகுமார், அரசு கேபிள் டி.வி. நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 70 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் அரசு கேபிள் டி.வி. சேவையில், மொத்தம் 90 சேனல்கள் ஒளிபரப்பாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலவசச் சேனல்களின் ஒளிபரப்பு முதற்கட்டமாகத் தொடங்கியுள்ளது.